Published : 27 Jun 2017 08:58 AM
Last Updated : 27 Jun 2017 08:58 AM
போரூர் ஏரி நீரை சுத்திகரித்து, குடிநீராக விநியோகிக்கும் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியதையொட்டி அதன் சோதனை ஓட்டம், ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்பட இருப்பதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான 4 ஏரிகளும் வறண்டுவிட்டது. இந்நிலையில், மாநகரின் கோடைகால நீர் தேவையை பூர்த்தி செய்ய, மாற்று நீர் ஆதாரங்களை தேடும் பணியில் சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, போரூர் ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து சென்னை மக்களின் குடிநீர் விநியோகத்துக்காக பயன் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான இயந்திரம் குஜராத்தில் இருந்து வரவழைக்கப் பட்டு, அதை நிறுவும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
போரூர் ஏரியில் உள்ள நீரை பரிசோதித்ததில், குடிப்பதற்கு உகந்தது என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அதே இடத்தில் நீரை சுத்திகரித்து, குடிநீராக்கி, தினமும் 4 மில்லியன் லிட்டர் குடிநீர் வீதம், 3 மாதங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது குழாய்கள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கருவிகளை நிறுவும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஜூலை முதல் வாரத்தில் சோதனை ஓட்டத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT