Published : 13 Mar 2014 06:17 PM
Last Updated : 13 Mar 2014 06:17 PM

தமிழக மீனவர்கள் மேலும் 24 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 24 பேரை நீதிமன்ற காவல் முடியும் முன்னரே இலங்கையிலுள்ள மன்னார் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்திரவிட்டது.

தமிழக - இலங்கை இருநாட்டு மீனவர்களின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 177 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் கொழும்பில் மார்ச் 13 அன்று நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினார்.

ஆனால், மார்ச் 12 செவ்வாய்கிழமை காலை வரை இலங்கை அரசிடமிருந்து மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை. இதனை தொடர்ந்து இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தை தள்ளிப்போனது.

பின்னர் புதன்கிழமை மதியம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிமன்ற காவல் முடியும் முன்னரே தமிழக மீனவர்கள் 116 பேர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தமிழக மீனவர்கள் 116 பேரையும் அவர்களின் 26 விசைப்படகுகளையும் விடுதலை செய்தனர்.

இதனை தொடர்ந்து, வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சார்ந்த 15 நாட்டுப்படகு மீனவர்களையும், ராமேஸ்வரத்தை சார்ந்த 9 விசைப்படகு மீனவர்கள் என 24 தமிழக மீனவர்களை வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் நீதிமன்ற காவல் முடியும் முன்னரே நீதிபதி ஆனந்தி கனகரெத்தினம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இலங்கை நீதித்துறை பரிந்துரையின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 24 பேரையும் நீதிபதி ஆனந்தி கனகரெத்தினம் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

தற்போது விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 140 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் பொறுப்பில் உள்ளனர்.

காங்கேசன் துறை, தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்படைத் தளங்களில் உள்ள தங்களின் படகுகளை சரி செய்து இன்னும் ஓரிரு நாட்களில் மீனவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மீதமுள்ள 37 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x