Published : 17 Jan 2014 03:15 PM
Last Updated : 17 Jan 2014 03:15 PM

தமிழக மீனவர்கள் 121 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 121 பேரை இலங்கை நீதிமன்றங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்தும், 30 மீனவர்களின் காவலை நீட்டித்தும் உத்திரவிட்டது.

கடந்த புதன்கிழமை இந்திய - இலங்கை இருநாட்டிலும் காவலில் உள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் மற்றம் இலங்கை அமைச்சர் ரஜீதா சேனரத்னே ஆகியோர் தலைமையில் இருநாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளும் இணைந்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இலங்கை ரஜீதா சேனரத்னே, இலங்கை சிறையில் இருக்கும் அனைத்து தமிழக மீனவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.

மண்டபம் மீனவர்கள் 10 பேர்

இந்நிலையில் கடந்த ஜனவரி 2 மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே சிறை பிடித்து சென்றனர். 10 மண்டபம் மீனவர்களின் காவல் வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தை அடுத்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி ஆனந்தி கனகரெத்தினம் மீனவர்கள் 10 பேரையும் விடுதலை செய்ய உத்திரவிட்டார்.

நாகப்பட்டினம் மீனவர்கள் 111 பேர்

அதனை போன்று கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி இலங்கை முல்லைத்தீவுக்கு அருகே இலங்கை நீர்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கூறி நாகைப்பட்டிணம் மாவட்ட மீனவர்கள் 111 பேரையும் சிறைப்பிடித்து அவர்களின் 15 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டம் மீனவர்கள் 111 பேரும் ஜனவரி 20 வரையிலும் நீதிமன்றக் காவலில் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய-இலங்கை இருநாட்டு அமைச்சர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நீதிமன்ற காவல் முடிவதற்கு முன்னதாகவே இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் நாகைப்பட்டிணம் மீனவர்கள் 111 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

30 மீனவர்கள் காவல் நீட்டிப்பு

கடந்த நவம்பர் 5 அன்று கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 17 மீனவர்களையும் அவர்களின் 4 படகுகளையும், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மீனவர்களின் வலைகளையும், பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.

பின்னர், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரையும் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று மீனவர்களை விசாரிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, யாழ்பாணம் மாவட்டம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த மீனவர்களை காவலில் வைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 30 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 30 பேரின் காவல் வெள்ளிக்கிழமை முடிவடைந்ததை அடுத்து, மல்லாகம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த மல்லாகம் நீதிபதி கஜநிதி பாலன் ஏழாவது முறையாக காவலை நீட்டித்து ஜனவரி 29 வரை காவலில் வைக்க உத்திரவிட்டார். மீனவர்கள் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x