Published : 27 Sep 2013 11:11 AM
Last Updated : 27 Sep 2013 11:11 AM

தமிழர் பகுதியிலிருந்து இலங்கை ராணுவம் உடனே வெளியேற வேண்டும்

இலங்கையில் தமிழர் வாழும் பகுதியிலிருந்து ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, பாதுகாப்பு வழங்க இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும். மத்திய அரசின் அழுத்தத்தால்தான் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்று, தமிழர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் முடிவு கிடைத்துள்ளது. அங்கு தொடர்ந்து அமைதி நிலவ வேண்டுமெனில், தமிழர் பகுதியிலிருந்து இலங்கை ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கைப் படையினர் உடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும்.

பொருளாதாரம், சுற்றுச்சூழல் ரீதியாகவும், மீன் பிடித்தலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாமலும், இந்தப்பிராந்தியத்தின் வளர்ச்சி போன்ற காரணிகளை ஆராய்ந்தும் தெளிவுபடுத்திய பிறகே சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. ஆனால், இந்தத் திட்டத்தை பலரும் எதிர்க்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் அவசியம்.

காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்களின் உணர்வுகளை ஆழமாக அறிந்த கட்சி. கட்டாயக் கல்விச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நலனைப் பாதுகாக்கும் கட்சி காங்கிரஸ்.

மத்தியில் 2-வது, 3-வது அணிகள் எவை என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், முதல் அணி காங்கிரஸ் அணிதான். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, பல பகுதிகளுக்கும் சென்று மோடி பேசி வருகிறார். அதேபோலத்தான் அவரது திருச்சி வருகையும்.

தமிழக அரசின் செயல்பாடு வருகிற மக்களவைத் தேர்தல் முடிவில் தெரிந்துவிடும். தமிழகத்தில் கொலை, கொள்ளையை இரும்புக் கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும் என்றார் வாசன்.

பேட்டியின் போது, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ரங்கசாமி மூப்பனார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x