Published : 13 Feb 2017 07:50 AM
Last Updated : 13 Feb 2017 07:50 AM

மண்டைக்காடு கோயிலுக்கு உபயம்: கொடிமரம் ஏறிய மறுநாள் போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் பகவதி அம்மன் கோயில் உள்ளது. ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் இக்கோயிலில் கடந்த 6-ம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கொடிமரம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உபயமாக வழங்கியது. கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற்ற மறுநாள் தான் (பிப்.7) ஜெயலலிதா நினைவிடம் சென்று முதல்வர் தனது போராட்டத்தை தொடங்கினார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு புதிய கொடிமரம் தேவைப்பட்டதை அறிந்து, அதை தானே உபயமாக வழங்க முன்வந்தார்.

இதற்காக பொள்ளாச்சியில் இருந்து 51 அடி உயரத்தில் ஒரே தேக்குமரம் அவரது ஏற்பாட்டில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்று நேர்ந்து கொண்டு இந்தக் கொடி மரத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அப்போது இருந்தே மூலிகை எண்ணெய் ஊறலில் இருந்த கொடிமரம், கடந்த 6-ம் தேதி மண்டைக்காடு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளான 7-ம் தேதி இரவுதான் முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்தார்.

“அமைதியானவராக மட்டுமே உணரப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மண்டைக்காடு கோயில் கொடிமரம் ஏறியதும், துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். இதற்கு மண்டைக்காடு அம்மனின் அருளும் துணை நிற்கிறது. அரசியல் முடிச்சுகளில் வென்று நிச்சயம் மீண்டும் இக்கோயிலுக்கு வருவார்” என்கின்றனர், கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x