Published : 28 Mar 2017 12:57 PM
Last Updated : 28 Mar 2017 12:57 PM

சீமைக்கருவேல மரம் அகற்ற குவியும் நிதி: இதுவரை ரூ.2.50 லட்சம் திரண்டது - வைகோ, வழக்கறிஞர்கள் உதவி

தமிழகத்தில் கருவேல மரங்களை அகற்ற தேவையான நிதி வசூல் செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் வழக்கறிஞர்கள் நிதி வழங்கினர். இந்த கணக்கில் நேற்று வரை ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக நிதி சேர்ந்துள்ளது.

மதிமுக பொதுச் செயலர் வைகோ உட்பட பலர் தாக்கல் செய்த பொது நலன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. மேலும் கருவேல மரங்களை அகற்ற தனிச் சட்டம் கொண்டு வரவும், தேவையான நிதியை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடக்கின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் நிதிப் பற்றாக்குறையால் இப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு தேவையான நிதியை திரட்ட உயர் நீதிமன்ற கிளையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உயர் நீதிமன்றப் பதிவாளர் பெயரில் தனி வங்கிக் கணக்கு தொடங்கப் பட்டுள்ளது. கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிபதிகளில் ஒருவரான ஏ.செல்வம் தனது சொந்தப் பணத்தில் இந்த கணக்கில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த கணக்கில் பலர் பணம் செலுத்தி வருகின்றனர்.

கருவேல மரங்களை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, இந்த கணக்கில் நேற்று ரூ.15 ஆயிரம் செலுத்தினார். மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ரூ.25 ஆயிரம், வழக்கறிஞர் ஆணையர்கள் ஆர்.காந்தி, கு.சாமித்துரை தலா ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்தனர். இந்த கணக்கில் இதுவரை ரூ.2.50 லட்சம் சேர்ந்துள்ளது.

இந்த வங்கிக் கணக்கில் நிதி சேகரிக்க நீதிபதிகளில் சிலர் நேரடியாகவும், பலர் மறைமுகமாகவும் உதவி செய்து வருகின்றனர். நீதிபதிகளில் பலர் தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை இந்த வங்கிக் கணக்கில் செலுத்துமாறு உத்தரவிடுகின்றனர்.

பொது இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கு நிதி தேவையான பட்சத்தில் இந்த வங்கிக் கணக்கில் இருந்து நிதி உதவி செய்யப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x