Published : 18 Feb 2017 03:08 PM
Last Updated : 18 Feb 2017 03:08 PM

பேரவைக்குள் எங்களை உதைத்து சட்டைகளை கிழித்தனர்: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காட்டம்

ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

இது தொடர்பாக இன்று அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சட்டப்பேரவையை ஒத்திவைத்ததும் சபாநாயகர் தனபால் அவர் அறைக்கு என்னை அழைத்தார். அவராகவே சட்டையைக் கிழித்துக்கொண்டு, உங்கள் கழகத்தைச் சார்ந்த பேரவை உறுப்பினர்கள் சட்டையைக் கிழித்துவிட்டனர். இது நியாயமா? என்று என்னிடம் கேட்டார்.

தெரிந்தோ தெரியாமலோ தவறு நடந்திருந்தால் நான் பொறுப்பேற்கிறேன். அதற்கு திமுக சார்பில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சபாநாயகரிடம் கூறினேன்.

அதற்குப் பிறகு தனி அறையில் பேசியதை சட்டப்பேரவைக்குள் சபாநாயகர் பேசினார். அதை ஏன் சபைக்கு கொண்டு வர வேண்டும்? அவைக்குறிப்பில் எழுதுவதற்காகவே திட்டமிட்டு சபாநாயகர் சட்டப்பேரவையில் பேசினார்.

பேரவை முறையாக நடக்க, நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் இடம் தரவில்லை.

சட்டப்பேரவைக்குள் ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்'' என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x