Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்- தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க..ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மீனவர் நலன் பற்றி ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை. வழக்கமான வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறார். வேறு எந்த புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்துவதில்லை.

கருணாநிதி எப்போது ஆட்சிக்கு வந்தாலும், மீனவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருப்பவர். முதல்வர் ஜெயலலிதாவோ, கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடிய மீனவர்கள் மீது, எண்ணற்ற கிரிமினல் வழக்குகளைப் போட்டார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 15 கட்டளைகளை பிறப்பித்தனர்.

அதில், போராட்டக்காரர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் வாபஸ் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டு, ஒன்பது மாதமாகியும் இதுவரை வழக்குகளை வாபஸ் வாங்காமல் இருப்பது வேதனையானது, நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது.

ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல், கூடங்குளம் மீனவர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு வாபஸ் பெறவேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x