Published : 22 Mar 2016 01:08 PM
Last Updated : 22 Mar 2016 01:08 PM
திமுக தலைவர் கருணாநிதி தேமுதிகவுக்கு புதிதாக அழைப்பு ஏதும் விடுக்கவில்லை; தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவே இல்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
"ஏற்கெனவே விடுத்த அழைப்பு குறித்தே கருணாநிதி சுட்டிக்காட்டினார். அவர் தெளிவாக கூறிய கருத்துகளை சில ஊடகங்கள் மிகைப்படுத்தி விமர்சனத்தை தூண்டியிருக்கின்றன" என்றார் அவர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், "திமுக தலைவர் கருணாநிதி தேமுதிகவுக்கு புதிதாக அழைப்பு ஏதும் விடுக்கவில்லை. ஏற்கெனவே விடுத்த அழைப்பு குறித்தே கருணாநிதி சுட்டிக்காட்டினார். அவர் தெளிவாக கூறிய கருத்துகளை சில ஊடகங்கள் மிகைப்படுத்தி விமர்சனத்தை தூண்டியிருக்கின்றன.
தேமுதிகவுக்கு முன்னர் அழைப்பு விடுத்தது உண்மை. அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதும்; ஏற்றுக்கொள்ளாததும் அவர்களது உரிமை. அந்த ஜனநாயக உரிமையில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை. எனவே, தேமுதிகவுடன் அப்போதும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை, இப்போதும் எவ்வித பேச்சுவார்த்தை நடைபெறவில்லை" என்றார்.
முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) தேமுதிக கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த திமுக தலைவர் கருணாநிதி, "திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என நான் தெரிவித்த நம்பிக்கையை என்னை பொறுத்தவரையில் இன்னும் இழந்து விடவில்லை.
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு நடைபெற்று வருகிறது. கூட்டணி அறிவிப்பு எந்த மாதத்தில், எந்தத் தேதியில் வரும் என்றெல்லாம் நாள் குறித்துச் சொல்ல முடியாது. வரலாம்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT