Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

அம்மா திட்டம் தேடிவரும் அடித்தட்டு மக்களும் அதிகாரிகளும்!

தமிழக முதல்வரின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதியன்று ‘அம்மா திட்டம்’ என்கிற பெயரில் அடித்தட்டு கிராம மக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் தேடிச் சென்று முகாமிட்டு அன்றைய தினமே பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தீர்வு தரும் நிகழ்வு துவக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு கிராமம் கிராமமாக தமிழகம் முழுக்க உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் மக்களைத்தேடிச் சென்று நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

தமிழக முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மருதாண்டாக் குறிச்சி பஞ்சாயத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்ற சீராத்தோப்பு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு காலையில் நேரில் சென்றோம்.

பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன்பே சிலர் மனுக்களுடன் காத்திருந்தனர். பத்து மணிக்கு அந்தப் பகுதி வருவாய் அலுவலர், ஆறேழு கிராம நிர்வாக அலுவலர்களுடன் வந்தார். ரங்கம் தாலுகா துணை வட்டாட்சியர் ராஜவேலுவும் வந்திருந்தார். சாமியானா பந்தல் அமைத்து நாற்காலிகள் போட்டு மனுக்கள் எழுத இரண்டு புறமும் வரிசையாக மேஜைகள் அமைத்து ஏற்பாடுகளை அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரான கிருஷ்ணக்குமார் செய்திருந்தார். மக்கள் வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர்.

அம்மா திட்ட முகாம் என பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட காகிதங்களில் சில விவரங்களைப் பூர்த்தி செய்து பயனாளிகள் வழங்கும் விவரங்களையும் சேர்த்து அங்கேயே காத்திருக்கும் அடுத்தக் கட்ட அதிகாரிகளுக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கேயே கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த மனுக்களின் மீது பரிசீலனை செய்து தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

இந்த கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பும் அம்மா திட்ட முகாம் நடைபெற்றிருந்ததால் இம்முறை மனுக்கள் குறைவாகவே வந்தன. கடந்த முறை 192 மனுக்கள் வந்தன. இம்முறை 143 மனுக்கள் வந்தன. அதில் 80 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. பெரும்பாலான மனுக்கள் சாதி, வருவாய், இருப்பிட சான்றிதழ்கள் கேட்டும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாகவும் வந்தன. பட்டா பெயர் மாற்றம், பட்டா சப் டிவிசன் செய்தல் தொடர்பாக வந்த மனுக்கள் மீது பிறகு நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதாகச் சொல்லி அனுப்பி வைத்தனர். ஸ்ரீரங்கம் வட்டாட்சியர், பவானி கோட்டாட்சியர், பயிற்சி துணை ஆட்சியர் ஆகியோரும் மதியம் 1 மணிக்கு அங்கே வந்தனர். பரிசீலனை முடிந்த மனுக்கள் தொடர்பானவற்றுக்கு உடனே சான்றிதழ்கள் தயாரித்து வழங்கினர்.

போதிய சான்றுகள் இல்லாமல் வந்த சிலர் திருப்பி அனுப்பப்பட்டனர். 22 வயதான தனது மகன் கண்ணனுக்கு பிறப்புச் சான்றிதழ் வேண்டும் என மனு அளித்தார் பார்வதி என்பவர். அவரது மகன் பிறந்தது திருச்சி அரசு மருத்துவமனை எனச் சொன்னார் பார்வதி. அங்கே சென்று கேட்டால் அவர்கள் சான்று பெற வழி செய்வார்கள் எனச் சொல்லி அவரை அனுப்பி வைத்தனர்.

மருதாண்டாக் குறிச்சியைச் சேர்ந்த சக்திவேல் அவரது ரேஷன் கார்டில் தவறுதலாக 2 எரிவாயு சிலிண்டர் இருப்பதாக அச்சிடப்பட்டதை மாற்றித்தரக் கோரினார். ரேஷன் கார்டில் சிலிண்டர் இல்லை என உங்களுக்கான ரேஷன் கடையில் பதிவு செய்துவிட்டு வாருங்கள் எனச்சொல்லி அவரை அனுப்பி வைத்தனர்.

போதிய சான்றிதழ்கள் இணைக்காததால் தாமரைச்செல்வன் என்பவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க இயலாது என அறிவித்தனர். விஜயதாரணி என பெயர் எழுதி ஒரு பெண்ணுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ் வாங்கிச் சென்ற சிறிது நேரத்தில் “என் பெயரைத் தப்பாக எழுதியுள்ளனர்” என வேகமாக ஓடிவந்தார் அந்தப் பெண். பிறகு விஜயதாரிணி என மாற்றி எழுதி வாங்கிச் சென்றார்.

லட்சுமிகாந்தம் என்கிற அங்கன்வாடி காப்பாளர் 3 ஆண்டு களாக வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சொந்த இடம் ஒதுக்கித்தரக்கோரி முறையிட்டார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கோட்டாட்சி யரைச் சந்தித்து பள்ளியில் இடப்பற்றாக் குறை உள்ளது. அதனால் அருகே யுள்ள, அரசுக்குச் சொந்தமான இடத்தை பள்ளிக்காக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒரு மாதம் ஆகும் எனவும் பட்டா உட்பிரிவு செய்ய ஒன்றரை மாதம் ஆகும் எனவும் சொல்லி அதற்காக மனுச் செய்தவர்களை அனுப்பி வைத்தனர் அதிகாரிகள்.

வருவாய்த் துறை அலுவலகங்க ளுக்கு சில சேவைகளைப் பெற அலையும் பொதுமக்களுக்கு அம்மா திட்டம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

சாதிச் சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், வட்டாட்சியர் அலுவல கங்களுக்கு நாள் கணக்கில் படையெடுக்கும் சாமான்ய பொது ஜனத்திற்கு இம்முகாமில் சில நிமிடங்களில் அவர்கள் விரும்பும் சில சான்றிதழ்கள் கிடைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x