Published : 31 Oct 2014 09:51 AM
Last Updated : 31 Oct 2014 09:51 AM
தாம்பரத்தில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் காவல் ஆய்வாளர் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர். சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
சென்னை தாம்பரம் எம்ஆர்எம் சாலை சுரங்கப்பாதை அருகே ஒரு செருப்புக் கடை உள்ளது. அந்த கடை முன்பு கொடி நடுவதற்காக சிலர் நேற்று முன்தினம் இரவு குழி தோண்டினர். கடைக்காரர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கும் குழி தோண்டியவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் ஆதரவாக கூட்டம் கூடியது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டனர். இதில் சிலர் காயம் அடைந்ததால் பரபரப்பு அதிகமானது.
தகவல் கிடைத்து தாம்பரம் போலீஸார் வந்தனர். மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட சோடா பாட்டில் ஒன்று காவல் ஆய்வாளர் செல்லப்பாவின் தலையில் விழுந்தது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
ஆய்வாளர் செல்லப்பா உட்பட மோதலில் காயம் அடைந்த 7 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று காலை நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT