Last Updated : 03 Sep, 2016 09:38 AM

 

Published : 03 Sep 2016 09:38 AM
Last Updated : 03 Sep 2016 09:38 AM

தென்னை நார் கழிவு ஏற்றுமதியில் சாதிக்கும் தூத்துக்குடி தொழில்முனைவோர்: 15 ஆண்டுகளாக தொடர்ந்து மத்திய அரசின் விருது

தென்னை நார் கழிவு ஏற்றுமதியில் தூத்துக்குடியைச் சேர்ந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து மத்திய அரசின் விருதைப் பெற்று வருகிறது.

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய கயிறு வாரியம், கயிறு பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் அதிக அளவில் கயிறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2013- 2014 மற்றும் 2014- 2015-ம் ஆண்டுகளுக்கான விருது பெற்ற நிறுவனங்களின் பட்டியலை மத்திய கயிறு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த செறிவூட்டப்பட்ட தென்னை நார் கழிவுகளை ஏற்றுமதி செய்யும் ‘சிவந்தி ஜோ காயர்ஸ்’ என்ற நிறுவனம் 2013-2014-ம் ஆண்டில் அதிகமாக கயிறு பொருட்களை ஏற்றுமதி செய்த நிறுவனத்துக்கான விருதுக்கும், 2014- 2015-ம் ஆண்டில் சிறிய அளவிலான கயிறு பொருட் கள் தயாரிப்பு நிறுவனத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதுக் கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக் கோட்டையில் இருந்து சாயர்புரம் செல்லும் தேரி சாலையில் சிவந்தி ஜோ காயர்ஸ் நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை டன்ஸ்டன் டி.ஜோசப் மற்றும் கே.சிவாகர் ஆகியோர் இணைந்து கடந்த 1995-ம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம், விவசாயத்துக்குப் பயன்படும் நார் கழிவுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. வெளிநாடுகளில் மண்ணில்லா விவசாய முறை அதி கரித்து வருவதால் மண்ணுக்குப் பதிலாக தென்னை நார் கழிவு பயன்படுத்தப்படுகிறது. தென்னை நார் கழிவை விவசாய நிலங்களில் பரப்பி, இயற்கை உரமாகவும், நீர் சேமிப்பு காரணியாகவும், நுண்ணுயிரிகள் வளர்த்து அதன் மூலம் விவசாயத்தைப் பெருக்கவும் பயன்படுத்துகின்றனர்.

மத்திய அரசின் விருது குறித்து சிவந்தி ஜோ காயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டன்ஸ்டன் டி.ஜோசப் மற்றும் இயக்குநரான கே.சிவாகர் ஆகியோர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

‘சிவந்தி ஜோ காயர்ஸ்’ நிறுவ னத்தைக் கடந்த 1995-ல் தொடங்கி னோம். விவசாயத்துக்குப் பயன் படும் தென்னை நார் கழிவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கி றோம். திருச்செந்தூர் முதல் கன்னி யாகுமரி மாவட்டம் வரை அமைந் துள்ள கயிறு பொருட்கள் தயாரிக் கும் நிறுவனங்களிடம் இருந்து தென்னை நார் கழிவை வாங்கு கிறோம். விவசாயிகளிடமும் நேரடி யாக தேங்காய் மட்டைகளை வாங்குகிறோம்.

இந்த தென்னை நார் கழிவை ஆலையில் சுத்தப்படுத்தி, பதப் படுத்தி, அதில் பயிர்களுக்கு தேவை யான உரங்களையும் சேர்த்து உலர வைக்கிறோம். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி விகிதத்தில் உரங்களைச் சேர்க்கிறோம். நன்கு உலர்ந்ததும் அவற்றை பாக்கெட் களில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். தென்னை நார் கழிவை கச்சாவாக வாங்கி வந்து பதப்படுத்தி உலர்த்தி உர மாக தயார் செய்ய 6 மாதங்கள் ஆகும்.

1 கிலோ முதல் 15 கிலோ வரை பாக்கெட்களில் பேக்கிங் செய்கிறோம். மேலும் 1 டன் வரை யிலும் தனியாக அனுப்புகிறோம். ஹாலந்து, ஜெர்மனி, அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 65 நாடுகளுக்கு எங்கள் பொருள் ஏற்றுமதியாகிறது. கடந்த 2013-2014-ம் ஆண்டு முதல் முறையாக சியோரோ லியோன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்தோம். அந்த நாட்டுக்கு இந்தியாவில் இருந்து இதுவரை யாரும் தென்னை நார் கழிவை ஏற்றுமதி செய்யவில்லை. அந்த நாட்டுக்கு 10 சரக்கு பெட்டகங்களில் 260 டன் ஏற்றுமதி செய்தோம். இதனால் அதிக ஏற்றுமதிக்கான விருதுக்கு எங்கள் நிறுவனம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

ஆண்டுக்கு நாங்கள் 35 ஆயிரம் டன் செறிவூட்டப்பட்ட தென்னை நார் கழிவை ஏற்றுமதி செய்கிறோம். 2014- 2015ம் ஆண்டின் சிறந்த சிறு தொழில் ஏற்றுமதியாளருக்கான விருதுக்கும் எங்கள் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய கயிறு வாரியத்தின் விருதை சிவந்தி ஜோ காயர்ஸ் நிறுவனம் கடந்த 2000-2001-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளாக பெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் தென்னை நார் கழிவுக்கு வரவேற்பு இருப்ப தால் ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்ந்து வருகிறது. செறிவூட்டப் பட்ட தென்னை நார் கழிவை ஏற்று மதி செய்ய சர்வதேச தரச்சான்று உட்பட உலக அளவில் பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றுள்ளோம்.

எங்கள் நிறுவனம் ஆண்டு தோறும் ரூ.40 கோடி அளவுக்கு தொழில் செய்து வருகிறது. 350 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக் கிறோம். தற்போது மதிப்பு கூட்டப் பட்ட தென்னை நார் கழிவு பொருட் களைத் தயாரிக்கும் ஆலையைத் தொடங்கியுள்ளோம். அதனைப் பெரிய அளவில் மேம்படுத்துவதே எங்களது எதிர்காலத் திட்டம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x