Published : 08 Jun 2017 11:13 AM
Last Updated : 08 Jun 2017 11:13 AM

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

வழக்கையொட்டி டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். தன் மீது தவறு ஏதும் இல்லை என அவர் தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்தார்.

இந்த வழக்கில் தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதுடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை கடந்த 1996-ல் 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி சசி கலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஏற்கெனவே எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு சசிகலா மீதான ஒரு வழக்கிலிருந்தும், தினகரன் மீதான 2 வழக்குகளிலிருந்தும், பாஸ்கரன் மீதான ஒரு வழக்கிலிருந்தும் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது. எழும்பூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக் கத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்தும், எழும்பூர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிடிவி தினகரன் மீதான 2 வழக்கு விசாரணையும் எழும்பூர் பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கோடநாடு எஸ்டேட் பங்களாவை போலி நிறுவனங்கள் மூலம் வாங்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் மீது எழும்பூர் நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x