Published : 02 Aug 2016 01:08 PM
Last Updated : 02 Aug 2016 01:08 PM

சவுதியில் காயமடைந்த பெண்ணுக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி

சவுதி அரேபியாவில் பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்ட கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக, வீட்டு பால்கனியிலிருந்து குதித்ததில் காயமடைந்த சென்னையைச் சேர்ந்த தாட்சாயிணிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "சவுதி அரேபியாவில் பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்ட கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக, வீட்டு பால்கனியிலிருந்து குதித்ததில் முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்த தாட்சாயிணிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை முதல்வர் வழங்கினார்.

சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தாட்சாயிணி, சவுதி அரேபியாவில் பணிக்குச்சென்று அங்கு பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்ட கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக, வீட்டு பால்கனியிலிருந்து குதித்ததில், முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்து சவுதி அரேபியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்குள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் 16.6.2016 அன்று சென்னைக்கு அனுப்பப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தாட்சாயிணி முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்த செய்தி அறிந்த முதல்வர், தாட்சாயிணியின் குடும்ப சூழ்நிலை, உடல்நிலை மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிடவும், அவருக்கு உயர்தர சிறப்பு சிகிச்சை அளித்திடவும் உத்தரவிட்டார்.

மேலும், இந்த 10 லட்சம் ரூபாய் தாட்சாயிணி பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, இந்த வைப்பு நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125 ரூபாய் தாட்சாயிணிக்கு கிடைக்கப் பெறும் என்று 17.6.2016 அன்று அறிவித்தார்.

அதன்படி, தாட்சாயிணிக்கு இன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை வழங்கினார்.

முதல்வரிடமிருந்து நிதியுதவியை பெற்றுக் கொண்ட தாட்சாயிணி , தனது உடல்நிலை, குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதல்வருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது தாட்சாயிணியின் தாயார் உடனிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x