Published : 07 Apr 2017 07:56 AM
Last Updated : 07 Apr 2017 07:56 AM

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் - ஓபிஎஸ் அணியினர் மோதல்: எம்எல்ஏ உட்பட 10 பேர் காயம்

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரன் அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் எம்எல்ஏ உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியின்போது அவரது உடல் வைக்கப்பட்டிருந்ததுபோல மெழுகு சிலையில் செய்து, அதை ஒரு பெட்டியில் வைத்து மக்களிடம் காண்பித்து பிரச்சாரம் செய்தனர். இது டிடிவி தினகரன் அணியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகம் முன்பு தினகரன் அணியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவில் தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் டிடிவி தினகரன் அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பிரச்சாரம் செய்தனர். இரு அணியினரும் நேருக்கு நேர் சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மெழுகு சிலையை வைத்து பிரச்சாரம் செய்ததற்கு டிடிவி தினகரன் அணியினர் அதிருப்தி தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். கற்கள், கம்புகளை வைத்து தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதலில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 2 பேருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. வேட்பாளர் மதுசூதனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், தினகரன் அணியை சேர்ந்த மேலூர் தொகுதி எம்எல்ஏ செல்வம் உட்பட பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தாக்குதல் குறித்து தகவல் அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து எம்எல்ஏ செல்வத்துக்கு ஆறுதல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x