Published : 02 Jun 2016 08:19 AM
Last Updated : 02 Jun 2016 08:19 AM

ராமஜெயம் கொலை வழக்கில் ரகசிய அறிக்கை தாக்கல்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான 7-வது ரகசிய அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தனர். இதையடுத்து விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ராமஜெயம் கடந்த 29.3.2012 அன்று திருச்சியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையிலும், இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.

6 ரகசிய அறிக்கைகள்

இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசா ரணைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் இதுவரை 6 ரகசிய அறிக்கைகளை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்தனர். மேலும், ‘குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல் கிடைத்திருப்பதாகவும், அந்த தகவல் அடிப்படையில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட தாகவும், அவர்களை கைது செய்ய மேலும் அவகாசம் தர வேண்டும்’ என்றும் சிபிசிஐடி போலீஸ் தரப்பில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இறுதியாக, கடந்த மார்ச் 8-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீஸார் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டனர். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஜூன் 1-ம் தேதிக்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி தேவதாஸ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீஸாரின் 7-வது ரகசிய அறிக்கையை கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் தாக்கல் செய்தார். மனுதாரரின் வழக்கறிஞர் ரவி வாதிடும்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கையை படித்துப் பார்க்க வேண்டியுள்ளதால் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x