Published : 16 Feb 2014 01:20 PM
Last Updated : 16 Feb 2014 01:20 PM

ஜெயலலிதா பிரதமரானால் மகிழ்ச்சிதான்: சீமான்

காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி மூலம் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு உள்ளது. இத்தகைய நிலை உருவானால் மகிழ்ச்சிதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுபா. முத்துக்குமாரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவர் கொலை செய்யப்பட்ட இடமான புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சனிக்கிழமை முத்துக்குமாரின் படத்துக்கு மாலை அணிவித்து சீமான் அஞ்சலி செலுத்தினார்.

செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:

திருச்சியில் நடைபெறும் திமுக மாநாடு அக்கட்சியினருக்கு வேண்டுமானால் பயனளிக்கலாமே தவிர அதனால் தமிழகத்திற்கு எந்தவித பயனும் ஏற்படாது.

2016-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் அமைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஊழலை ஒழித்து விடமுடியாது. புரட்சியால் மட்டுமே அது சாத்தியமாகும்.

தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. இக்கட்சிகளைச் சேர்ந்த பிரதமர் வேட்பாளர்களைவிட ஆளும் தன்மையுள்ளவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று சீமான் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x