Published : 31 Oct 2013 05:57 PM
Last Updated : 31 Oct 2013 05:57 PM

இலங்கை சிறையிலுள்ள 36 தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 36 மீனவர்களின் காவலை, அந்நாட்டு நீதிமன்றங்கள் நீட்டித்து உத்தவிட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 3 அன்று நெடுந்தீவு மீன்பிடித்துக் கொண்டிருந்த நம்பு சேகரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திடிரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதடைந்தது. படகை சரி செய்ய முயன்றும் இயலாமல் போனதால் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் இருந்து குதித்து அருகே இருந்த நெடுந்தீவில் கரை ஏறினர். பின்னர் மீனவர்கள் 4 பேரும் நெடுந்தீவு காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

சரணடைந்த மீனவர்களை யாழ்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை காவல்துறையினர் ஆஜர்படுத்தி யாழ்பாணச் சிறையில் அடைத்தனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரின் காவல் வியாழக்கிழமை முடிவடைந்ததையடுத்து மீண்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி மகேந்திர ராஜா மீனவர்களை நவம்பர் 13 வரை காவலை நீட்டித்து உத்திரவிட்டார். பின்னர் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரும் மீண்டும் யாழ்பாணச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 15 அன்று காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிச்ச சென்ற அன்பழகன், ஆனந்தவேலு, செல்லத்துறை மற்றும் பொன்னுச்சாமி ஆகிய நான்குபேருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளில் 32 மீனவர்கள் இலங்கை திரிகோணமலை பகுதி நீர்பரப்பில் மீன்பிடித்தாகக் கூறி இலங்கை கடற்படையினர் அக்டோபர் 17 அன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 32 மீனவர்களை இலங்கை கடற்படை திரிகோணமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீனவர்களின் 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

இவர்களின் காவல் வியாழக்கிழமையோடு முடிவடைந்ததை அடுத்து திரிகோணமலை நீதிமன்ற நீதிபதி செந்தில்நாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி மீனவர்களின் காவலை நவம்பர் 14 வரை நீட்டித்து உத்திரவிட்டார். இதனையடுத்தது 32 காரைக்கால் மீனவர்கள் மீண்டும் திரிகோணமலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x