Published : 03 Oct 2013 04:14 PM
Last Updated : 03 Oct 2013 04:14 PM

ராஜன் குழு பரிந்துரை சரியே: ஜெ.-க்கு நாராயணசாமி பதில்

ரகுராம் ராஜன் குழு அறிக்கை சரியானதுதான் என்றும், முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு தவறானது என்றும் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், தமிழகத்துக்கு கிடைக்கும் மத்திய அரசின் நிதி அளவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.

அத்துடன், ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளை தமிழகத்தில் எந்த வடிவத்திலும் செயல்படுத்தக்கூடாது என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, “ரகுராம் ராஜன் குழுவின் அறிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுப்பியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

பிகார், ஒடிஷா உள்ளிட்ட பின்தங்கிய மாநிலங்களை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவே மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்குகிறது. தமிழகம் வளர்ந்து வரும் மாநிலம் என்பதால் சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை. பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதியளிப்பது மத்திய அரசின் கடமை” என்றார் நாராயணசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x