Published : 19 Jan 2014 04:01 PM
Last Updated : 19 Jan 2014 04:01 PM

தமிழகத்தின் மாற்று சக்தி தேமுதிகதான்: விஜயகாந்த்

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்றாக தமிழகத்தின் மாற்று சக்தி தேமுதிகதான் என்று நிரூபித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள தேமுதிக ஊழல் எதிர்ப்பு மாநாட்டு அழைப்பு விடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தேமுதிக தொடங்கிய சில மாதங்களிலேயே தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு பல லட்சம் வாக்குகளை பெற்றோம். அதை கண்டு மாற்றாரும் வியந்தனர்.

தேமுதிக தொடங்கியதில் இருந்து 2011–ம் ஆண்டு வரை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் நாம் தனித்தே போட்டியிட்டோம்.

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்றாக தமிழகத்தின் மாற்று சக்தி தேமுதிகதான் என்று நிரூபித்துள்ளோம்.

2011 சட்டமன்ற பொதுத்தேர்தலில், எனக்கு விருப்பமில்லை என்றாலும் கூட, உங்கள் அனைவரது விருப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற நோக்கில் நான் தலைகுனிந்தாலும் குனிவேனே தவிர உங்களை யாரிடமும் தலை குனிய விடமாட்டேன் என்ற உணர்வோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டோம்.

தேமுதிக கூட்டணி அமைத்ததன் விளைவாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நம்மால் உருவானது. ஆனால் தமிழக மக்கள் எதிர்பார்த்த ஆட்சியா தமிழகத்தில் நடைபெறுகிறது? தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும், விலைவாசி உயர்வையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் ஒழிப்போம் என்ற சூளுரையோடும், சாதி, மதம், இனம் என எந்த வித வேறுபாடும் பார்க்காமல் நாம் அனைவரும் ஒரே சாதி, ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாட்டுடன் தமிழ்நாட்டிற்கு நன்மைகள் நடந்திட வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்குடன் வருகிற 2014–ம் ஆண்டு பிப்ரவரி 2–ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எறஞ்சியில் தேமுதிக சார்பில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திட பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நன்றியை மறந்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் நடைபெற உள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில், கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை நீங்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளீர்கள் என்ற செய்தியினை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தாங்கள் மட்டும் மாநாட்டிற்கு வந்தால் போதாது. தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், தாய்மார்கள், சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்களோடும், நண்பர்களோடும் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் ஆசை" என்று விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x