Published : 13 Oct 2013 03:52 PM
Last Updated : 13 Oct 2013 03:52 PM

ஐந்து கிலோ சிலிண்டர் யாருக்கு லாபம்?

சமீபத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சோதனை முயற்சியாக ஐந்து கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அடிக்கடி இடம் பெயர்பவர்களுக்கும் அவசர உபயோகத் துக்கும் இது வரப்பிரசாதம் என்று பிரசாரம் செய்கிறது மத்திய அரசு.

ஆனால், இதன் பின்னால் இருக்கும் நுண் அரசியலைப் புரிந்து கொண்டால் எதிர்காலத்தில் எரி வாயுக்கான மானியம் என்பதே இல்லாமல் போகும் என்பது எளிதில் விளங்கும்.

தற்போது வீட்டு உபயோகத்துக்காக ஓர் இணைப்புக்கு ஓர் ஆண்டுக்கு ஒன்பது எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் எண்ணெய் நிறு வனங்கள் அளிக்கின்றன. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி அந்நிறுவனங்களுக்கு அளிக்கிறது.

விற்பனை அதிகரிப்பு

ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் அதன் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மளிகைக் கடை களிலும் பெட்டிக் கடைகளிலும் எரிவாயு நிரப்பிக்கொள்ளலாம். முன்பதிவு செய்யாமல், கட்டுப் பாடு இல்லாமல் கையோடு வாங்கி வந்துவிடலாம் என்பதால் வணிக நிறுவனத்தினர் மொத்தமாக ஐந்து கிலோ சிலிண்டர்களை கொள்முதல் செய்வர். அப்போது என்ன ஆகும்?

ஒருபக்கம் நாட்டில் எரிவாயு உற்பத்தி அதிகரிக்கவில்லை; மாறாக, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி, பாலாறு படுகையின் 8600 சதுர கி.மீட்டர் எண்ணெய் வளம் உள்ள பரப்பையும் கணக்கெடுப்புப் பணி என்கிற கண் துடைப்பில் ரிலையன்ஸ் - பிரிட்டிஷ் பெட்ரோலிய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டது மத்திய அரசு. அங்கு சுமார் 100 பில்லியன் பேரல்கள் இலகு ரக கச்சா எண்ணெய்யும் மூன்று டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவும் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதை எல்லாம் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை கிருஷ்ணா, கோதாவரி நதிப்படுகையில் அவர்கள் விளை யாடிய அசுர ஆட்டத்தை வைத்துப் புரிந்துகொள்ளலாம். அதைத் தட்டிக் கேட்டு அபராதம் விதித்த ஜெய்பால் ரெட்டி என்ன ஆனார் என்பதையும் நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. வீட்டு உபயோகத்துக்கான வெற்றிகரமான மாற்று எரிசக்தி யும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆகவே, சட்டியில் இருப்பதை எல்லாம் பணக்காரனின் அகப் பைக்கு அள்ளிக்கொடுத்து விட்டால் ஏழையின் அகப்பைக்கு என்ன கிடைக்கும்? அப்போது எண்ணெய் நிறுவனங் களால் மானிய விலைக்கு எரி வாயுவை வழங்க முடியாது.

இதன் விளைவாக புதிய இணைப்புகள் தருவது உள்பட இன்றைக்கு வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு கொள்கையில் இருக்கும் அனைத்து நடைமுறைகளும் கைவிடப்படும். இறுதியில் சமையல் எரிவாயுவும் கையில காசு - வாயில தோசை வணிகமாகிவிடும். இவை எல்லாம் நடக்க சில-பல ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால், அன்றைக்கு எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ஏழைகளுக்கும் மத்திய வர்க்கத்தினருக்கும் கஷ்டம் பழகியிருக்கும்.

இன்றைய தேதியில் எரிவாயு விலை (ஒரு கிலோவுக்கு)

19 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ. 98

5 கிலோ எரிவாயு சிலிண்டர் : ரூ.100.80

14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் (மானியம் அல்லாத) : ரூ. 70

14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் (மானியத்துடன்) : ரு. 28.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x