Published : 22 Feb 2017 08:37 AM
Last Updated : 22 Feb 2017 08:37 AM

மாநில தேர்தல் ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுமா?

உள்ளாட்சித் தேர்தல்களை தடையில்லாமல் அதன் பதவிக் காலம் முடிவடைவதற்குள் நடத்தி முடிக்க, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வேண்டும் அல்லது மாநில தேர்தல் ஆணையங்களை மத்திய தேர்தல் ஆணையத்துடன் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 243-K மற்றும் 243 - ZA ஆகிய பிரிவுகளின் கீழ் அரசியல் சட்ட சாசனம் சார்ந்த அதிகார அமைப்பே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். மேலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 239 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களின் அடிப்படையில் கடந்த 1994-ம் ஆண்டு ஜுலை 15-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது.

இந்திய அரசியல் சாசனத்தின் 73, 74-வது சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் சுதந்திரமான, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாநில தேர்தல் ஆணையம் திகழ வேண்டும். ஆனால், பட்டியல் இனத் தவர், பழங்குடியினர், மகளிர் இட ஒதுக்கீடு, சுழற்சி முறைகள், வார்டு மறு சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழக அரசை எதிர்பார்ப்பதால் தேர்தல் பணிகள் தாமதமாவதுடன் நீதிமன்றத்திலும் பல்வேறு சங்கடங்களைச் சந்தித்து வருகிறது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.

கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே மாநில தேர்தல் ஆணையங்கள் தகுந்த சட்டப் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டு, உண்மையான அதிகாரங் கள் கொண்ட அமைப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மாநில தேர்தல் ஆணையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. மேலும், அதன் பணியாளர்களும் மிகக் குறைவு. தேர்தல் ஆணையர், செயலாளர், தலைமை நிர்வாக அலுவலர், முதன்மை தேர்தல் அதிகாரிகள் உட்பட சுமார் 50 பேர் மட்டுமே தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான அதிகாரங்களும் மிகக் குறைவு.

மூன்றாவது அரசாங்கம்

இதுகுறித்து காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவு பேராசிரியரான பழனிதுரை கூறும்போது, “நமது நாட்டில் மூன்றாவதாக ஓர் அரசாங்கம் இருப்பதையே பல சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மறந்துவிடுகின்றன. நமது நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசின் பட்டியலில் 97 அதிகாரங்களும், மாநில அரசின் பட்டியலில் 66 அதிகாரங்களும், இரண்டு அரசுகளுக்குமான பொதுப் பட்டியலில் 47 அதிகாரங்களும் இருக்கின் றன.

அதைப்போலவே மூன்றாவது அர சாங்கமான உள்ளாட்சிகளிடம் ஊரகங் களுக்கு 29 அதிகாரங்களும், நகர்ப்புறங் களுக்கு 18 அதிகாரங்களும் இருக்கின்றன. மேற்கண்ட அதிகாரங்களில் பலவற்றை மூன்று அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து, புரிதல்களுடன் செய்தால் மட்டுமே அதன் பலன்கள் மக்களைச் சென்றடையும்.

உள்ளாட்சிகளுக்கு உரிய அதிகாரங் களைப் பகிர்ந்தளிக்க தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் விரும்புவதில்லை. அதனா லேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உரிய அதிகாரங்களை அளிப்பதில்லை. அதிகாரங் கள் இருப்பதுபோல வெளியே காட்டிக் கொண்டாலும், மாநில தேர்தல் ஆணையம் என்பது மாநில அரசு ஆட்டுவிக்கும் பொம்மை அமைப்பாகவே செயல்படுகிறது. அதன் தேர்தல் ஆணையரையும் மாநில அரசு நியமிக்கிறது. அவரை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இப்படி இருக்கும் சூழலில் மாநில தேர்தல் ஆணையம், ஆளும் அரசுக்கு சாதக மாகவே செயல்பட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது. இப்படியான ஒரு கட்டமைப் பின் மூலம் அதிகபட்சமாக தேர்தல் முடிவு களையே கூட பொய்யாக மாற்றிக் காட்ட இயலும். ஆனால், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களது மாநில தேர் தல் ஆணையங்களுக்கு முழுமையான அதிகாரங்களை அளித்திருக்கின்றன. கடந்த ஆண்டு கர்நாடக அரசு பல்வேறு இடங்களில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த காலம் தாழ்த்தியபோது, மாநில தேர்தல் ஆணையமே கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தது.

பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்தம்

தமிழகத்திலும் கேரளத்திலும் 1994-ம் ஆண்டு ஒரே நேரத்தில்தான் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் இயற்றப்பட்டன. தமிழகத்தில் இன்றுவரை அந்த சட்டத்தில் அதிகாரப் பரவலுக்காக பெரியதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், கேரள அரசு 1995, 96, 98, 99, 2000, 2001, 2003, 2005 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு முறை அதிகாரப் பகிர்வுகளுக்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை திருத்தி மேம்படுத்தியது. கேரள மாநில தேர்தல் ஆணையமே வார்டுகள் சீரமைப்பு பணிகள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறைகளை மேற்கொள்கிறது” என்றார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் பேசிய அதிகாரிகள், “தமிழகத்தில் அனைத்து பணிகளுக்கும் மாநில அரசையே மாநில தேர்தல் ஆணையம் நம்பியிருப்பது உண்மைதான். அதனால்தான், நீதிமன்றத் தில், ‘ஆவணங்கள் வந்து சேரவில்லை, தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை’ என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், தவறு மாநில தேர்தல் ஆணையத்தின் மீது அல்ல. சொல்லப்போனால் மாநில தேர்தல் ஆணை யம் தனது அதிகாரத்துக்கு உட்பட்டவரை ஏற்கெனவே பல பணிகளைச் செய்து முடித்துவிட்டது.

தேர்தல் தடைக்கான காரணம்

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களிலேயே அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுவிட்டன. வேட்பாளர் கையேடு தயாரிப்பது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் கையாளுவது குறித்த பயிற்சி, தேர்தல் பார்வையாளர்கள் கூட்டம் ஆகியவற்றை முடித்துவிட்டது. தற்போது மாநில அரசு இட ஒதுக்கீடு குறித்த தெளிவான அறிக்கையை அளிக்காததால்தான் தேர்தல் தடைப்பட்டிருக்கிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x