Published : 12 Sep 2016 10:16 AM
Last Updated : 12 Sep 2016 10:16 AM

தானப் பத்திரங்களை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

தானப் பத்திரங்களை ஒருதலைப் பட்சமாக ரத்துசெய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தானப் பத்திரங்களை ரத்து செய்து, கொடைக்கானல் மற்றும் மதுரை மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், தானப்பத்திரம் ரத்து செய்யப்பட்ட பதிவுகளை பதிவேட்டில் இருந்து நீக்கவும் கோரி, சாந்தா சுரேஷ் மற்றும் ஜார் ஹமீது ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தனித்தனியாக மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பிறப்பித்த உத்தரவு:

ஒருவர் தனக்கு சொந்தமான அசையா சொத்துகளை தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு தானப் பத்திரம் (செட்டில்மென்ட் அல்லது கிப்ட் டீடு) மூலம் பதிவு செய்து கொடுக்கும் போது அவற்றை ஒருதலைப் பட்சமாக ரத்து செய்ய முடியாது.

விற்பனைப் பத்திரம் ரத்து செய்யக்கோரிய வழக்கில், சொத்தை விற்றவர் ஒருதலைப் பட்சமாக விற்பனையை ரத்து செய்தால் அதனால் சொத்தின் மீது எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஏற்கெனவே செல்லத்தக்க ஆவணங்கள் மூலம் சொத்து விற்பனை செய்யப் பட்டிருக்கும்போது, அந்தப் பதிவை ரத்து செய்வதால் அந்த சொத்தின் மீது எந்த வில்லங்கமும் ஏற்படாது.

இதுபோன்ற பத்திரத்தை ரத்து செய்யும் பத்திரங்களை பதிவு செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற முழு அமர்வு ஏற்கெனவே உத்தரவிட் டுள்ளது.

மேலும் சொத்து பத்திரம் ரத்து செய்வது உரிமையியல் சட்டம் சம்பந்தப்பட்டது. மோசடி மற்றும் ஏற்கத்தக்க காரணங்களால் சொத்துப் பதிவை ரத்து செய்வதற்கு சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும்.

எனவே மனுதாரர்களின் தானப் பத்திரங்களை ஒருதலைப் பட்சமாக ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x