Last Updated : 20 Oct, 2016 03:08 PM

 

Published : 20 Oct 2016 03:08 PM
Last Updated : 20 Oct 2016 03:08 PM

சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தால் நேர்ந்த பயங்கரம்: மருத்துவ சோதனை மையத்தில் 8 பேர் பலி

ஜன்னலை உடைத்து மயங்கிய நிலையில் பலர் மீட்பு - காயம் அடைந்த 15 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று (வியாழக்கிழமை) பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அருகே ஸ்கேன் மையத்தில் இருந்த ஊழியர்கள் 5 பேர் மற்றும் பரிசோதனைக்கு வந்த 3 மாத கர்ப்பிணி உட்பட 8 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

மூச்சுத்திணறல் மற்றும் காயம் காரணமாக 15 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி சின்னத்தம்பி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்(38). இவர் சிவகாசி - விருதுநகர் பைபாஸ் சாலையில் உள்ள காமக் சாலையில் பட்டாசு கடை நடத்தி வந்தார்.

இதன் அருகே தனியார் ஸ்கேன் மருத்துவ மையம் உள்ளது. நேற்று மதியம் பட்டாசு ஆலையில் இருந்து 2 வேன்களில் கொண்டு வரப் பட்ட தீப்பெட்டி மத்தாப்பு ரக பட்டாசு களை கடையில் இறக்கிவைத்தனர். அப்போது உராய்வால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

கண்ணி மைக்கும் நேரத்துக்குள் கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறத் தொடங்கின. பேன்ஸி ரக பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்து 50 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் விழுந்தன. மேலும் பட்டாசு கடையில் பற்றிய தீயின் வேகம் சாலையின் எதிரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்தப் பகுதியில் இருந்த 300-க்கும் மேற்பட்டோர் ஓடிச் சென்று தப்பினர். விபத்தில் பட்டாசு கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.

தீக்குச்சி மத்தாப்புகளை ஏற்றி வந்த 2 வேன்களும் தீப்பற்றி எரிந்து கருகின. அப்பகுதியில் எழுந்த கரும்புகை வானத்தில் பல மீட்டர் உயரத்துக்கு பரவியது. மேலும் தீயுடன் கரும்புகை அருகே உள்ள தனியார் ஸ்கேன் மையம் உள்ளிட்ட பல கட்டிடங்களை சூழ்ந்தது. திடீர் பட்டாசு சத்தம் மற்றும் புகைமூட்டத்தால் ஸ்கேன் மையத்தில் இருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் கூச்சலிட்டு கதறினர். பலரும் பாதுகாப்பு தேடி ஸ்கேன் மையத்துக்குள் ஓடினர். பின்பக்கம் வழி ஏதும் இல்லாததால், ஸ்கேன் மையத்தில் இருந்த 15-க்கும் மேற்பட்டோர் எங்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்கள் கரும்புகையால் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் உதவியுடன் ஸ்கேன் மையத்தின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே மயங்கிக் கிடந்தவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஸ்கேன் மையத்தின் மேலாளர் சிவகாசி வெங்கடாச்சலபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர்(42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டைப்பிஸ்ட்களாக பணிபுரிந்த சிவகாசி காந்திநகரைச் சேர்ந்த கோபிநாத் மகள் வளர்மதி(18), மணிநகரைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி பத்மலதா(44), செவிலி யர்கள் ரிசர்வ் லைன் அருணாச் சலம் மகள் காமாட்சி(22), தாயில் பட்டியைச் சேர்ந்த மைக்கேல் மனைவி புஷ்பலட்சுமி(35) மற்றும் பரிசோதனைக்காகவும், உதவிக் காகவும் மையத்துக்கு வந்தி ருந்த திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் ஹரிராம் மனைவி சொர்ணகுமாரி(36), சண்முக ராஜ் மனைவி தேவி(18), சொக்க லிங்கபுரம் ராஜா(21) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். தேவி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

ஸ்கேன் மையத்தில் இருந்த மருத்துவர் ஜானகிராமன்(40), எஸ்.என்.புரம் சண்முகராஜன்(23), மேலபழையாபுரம் கணேசன்(61) ஆகியோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். ஜானகிராமன் மதுரை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப் பட்டுள்ளனர்.

மேலும் ஸ்கேன் மைய ஊழி யர்கள் முத்துப்பிரியா(23), சுமதி(26), காளியம்மாள்(60), மாரீஸ்வரி(30) மற்றும் சுப்பு லட்சுமி(52), மகேஸ்வரி(40), சரண்யா(29), லட்சுமி(55), கருப் பாயி அம்மாள்(40), இசக்கியம் மாள்(53), சுப்பிரமணி(49), தெய்வமலர்(42), ராக்கப்பன்(70) ஆகியோர் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தால் காயமடைந்து சிவகாசியில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x