Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM

ஏற்காடு தொகுதியில் ஒரு வாரம் முகாமிட ஸ்டாலின் திட்டம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஏற்காடு தொகுதியில் ஒரு வாரம் முகாமிட்டு பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்காடு தொகுதிக்கு வரும் 4-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு அதிமுக – திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளைக் கொண்ட 61 பேர் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திமுக வேட்பாளர் மாறனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் செல்வகணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்களும் அதிமுகவினரும் தேர்தல் விதி களைத் தொடர்ந்து மீறி வருவதாக திமுக தரப்பில் புகார்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் ஏற்காடு செல்ல உள்ளனர். இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஏற்காடு தொகுதியில் ஒரு வாரம் முகாமிட்டு தேர்தல் பணிகளைக் கவனிக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், 26-ம் தேதி முதல் மு.க.ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x