Published : 28 Jul 2016 02:14 PM
Last Updated : 28 Jul 2016 02:14 PM

பி.எஃப். நிதியை தொழிலாளர்கள் எந்த காலத்திலும் திரும்பப் பெறும் நடைமுறை தொடர வேண்டும்: ஜி.கே.வாசன்

தொழிலாளர்கள் தாங்கள் சேமிக்கும் பி.எஃப். நிதியை எக்காலக்கட்டத்திலும் திரும்பப் பெற மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த திட்டத்தையே தொடர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''1952-ம் ஆண்டின் தொழிலாளர் நலச் சட்டப்படி தொழிலாளர்களுக்கான வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015-16-ல் மத்திய அரசு பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்காக நலத்திட்டத்தை அறிவித்தது. இது வரவேற்கத்தக்கது.

ஆனால், அந்த திட்டத்துக்கான நிதியினை தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியில் சில திருத்தங்கள் கொண்டு வந்து அதிலிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த மார்ச் 18-ம் தேதி மத்திய அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது.

மூத்த குடிமக்களுக்கான சமூக நலத்திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து நிதியை இப்புதிய திட்டத்துக்கு மாற்றுவதால், தொழிலாளர்கள் ஏற்கெனவே வைப்பு நிதியின் மூலம் பெற்று வந்த பயனை அடைய முடியாத நிலை ஏற்படும். இது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கின்ற செயலாகும்.

எனவே, மத்திய அரசு தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தாமல், பழைய திட்டம் தொடர வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x