Published : 21 Jan 2014 10:13 AM
Last Updated : 21 Jan 2014 10:13 AM

தொல்லியல்துறை கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் மின் இணைப்பு- தமிழக மின் வாரியம் உத்தரவு

சென்னை அருகே தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளில் மீண்டும் மின் இணைப்பு வழங்க தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள ஒரு பகுதியும் திருப்போரூரின் ஒரு பகுதியும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதால், அங்கு புதிய கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே இந்தப் பகுதியில் இருந்த வீடுகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்புகள், சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், மின் இணைப்பு கிடைக்காததைக் கண்டித்து இப்பகுதி மக்கள், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கருப்பு பொங்கலாக அனுசரித்தனர். இதுகுறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தமிழக அரசு, தொல்லியல் துறை மற்றும் மின்வாரியத்துக்கு மக்கள் புகார்களை அனுப்பினர்.

இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டனர். மேலும் இதேபோல் எந்தெந்தப் பகுதிகளில், தொல்லியல் துறையின் தடையில்லா சான்றுக்காக மின் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் மின் இணைப்பு வழங்க மின் துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எந்தெந்தப் பகுதிகளில், தொல்லியல் துறையின் தடையில்லா சான்றுக்காக மின் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் மின் இணைப்பு வழங்க மின் துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x