Published : 19 Feb 2014 01:10 PM
Last Updated : 19 Feb 2014 01:10 PM

தமிழக அரசு முடிவு மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

செய்தியாளர்: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், அதனை மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி: மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்குமென்று நம்புகிறேன். அவர்களும் ஒப்புதல் அளித்து தூக்கு தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டால் நாம் மேலும் மகிழ்ச்சி அடையலாம்.

செய்தியாளர்: தமிழக அரசு துரித முடிவு எடுத்திருப்பதாக கருதலாமா?

கருணாநிதி: இது துரித முடிவு அல்ல. 2011ஆம் ஆண்டிலேயே இந்தக் கருத்தினை நான் தெரிவித்த போது அதை ஏற்காமல் ஏகடியம் பேசியவர் தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு அதே நிலையை அவர் எடுத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

செய்தியாளர்: தமிழக அரசே விடுவித்திருக்கலாமே; மத்திய அரசுக்கு அனுப்புவது அவசியமா?

கருணாநிதி: அது பற்றி விரிவாக முன்கூட்டியே யோசித்திருப்பார்களானால், இன்றைக்கே அவர்களை விடுதலை செய்திருக்கலாம். தாமதம் ஏற்படாது. தாமதமாக வந்தாலும் நாம் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு ஏற்படுமேயானால் நல்லதுதானே!

செய்தியாளர்: கால தாமதம் ஏற்பட்டதற்காக, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறதே?

கருணாநிதி: அதைப்பற்றி யாரும் எங்களிடம் பேசவில்லை. அதனால் நாங்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை. அப்படியொரு கோரிக்கை வைக்கப் பட்டால் அது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x