

இந்திய கடலோரக் காவல் படையின் காரைக் கால் முகாம் அதிகாரிகள் நேற்று மாலை வங்க கடலில் ரோந்துக் கப்பல் மூலம் ரோந்துப்பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது நாகப் பட்டினத்துக்கு தென்கிழக்கே 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 படகுகளில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களைச் சுற்றிவளைத்த கடலோரக் காவல் படையினர், 2 படகுகளிலும் இருந்த இலங்கை மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். அத்துடன் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள், அவர்களது படகுகளுடன் இன்று (மார்ச் 8) காலை காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படலாம் என்று தெரிகிறது. நாகப்பட்டினம் கடலோர காவல் குழும போலீஸாரிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.