

பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு, 18 ஆண்டுகள் நடந்து, கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, நால்வரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, அவர்களை விடுவித்தார்.
தற்போது உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணையையும் ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணைகளையும் முழுமையாக உறுதிப்படுத்துவதாக தீர்ப்பில் கூறியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இத்தீர்ப்பை மனமாற வரவேற்கிறது.
பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுவதுடன் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு இது வலு சேர்க்கும் என்றும் கருதுகிறது. ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
இச்சூழலில், காலம் தாழ்த்தாமல் ஆளுநர் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போக வேண்டும். அரசியல் ஸ்திரமற்ற தன்மை நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது. அரசியல் சட்ட நடைமுறையின் படி, சட்டப்பேரவை கூட்டப்பட்டு, உரிய முறையில் அரசாங்கம் நிறுவப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.