Published : 13 Feb 2014 07:32 PM
Last Updated : 13 Feb 2014 07:32 PM

இலங்கை கடற்படையினரால் 29 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு, யாழ்பாணச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டிணம், கோட்டைப் பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து தமிழக மீனவர்கள் 5000க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் ஒரு விசைப்படகையும், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 17 பேரையும் 4 விசைப்படகையும், கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப் பட்டிணம் மற்றும் கோட்டைப் பட்டிணம் சார்ந்த 8 மீனவர்களையும் இரண்டு விசைப் படகையும் சிறைப்பிடித்து மொத்தம் 29 தமிழக மீனவர்களையும் சிறைப்பிடித்தனர்.

பின்னர், இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 29 மீனவர்களையும் காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். காங்கேசன் துறையில் விசாரணைக்கு பின்னர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்களை இலங்கை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

மீனவர்களை விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி மகேந்திர ராஜா பிப்ரவரி 24 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 29 பேரும் யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை - தமிழக மீனவர்கள் முதற்கட்டப் பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27 அன்று சென்னையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தை முடிந்த கடந்த இரு வாரங்களுக்குள் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது இது நான்காவது முறையாகும். இதுவரை 116 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x