

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மருத்துவமனையை திறக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக (பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை) மாற்றும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யில் ஈடுபட்டுள்ளனர். 6 மாடிகள் கொண்ட இந்த மருத்துவ மனையில் 500 படுக்கைகள், 20 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள், 200 கழிப்பறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நோயாளிகளை ஸ்டெச்சர் மற்றும் வீல் சேர்களில் அழைத்துச் செல்ல வசதியாக சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனைக்குத் தேவையான 100-க்கும் மேற்பட்ட அதிநவீன மருத்துவ உப கரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. இங்கு இதயம், நரம்பியல், சிறுநீரகம், மயக் கவியல், ரத்தநாளம் உள்பட 9 சிறப்புத் துறைகள் செயல்பட உள்ளன.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) கீதாலட்சுமி ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஆய்வு செய்தனர். 6 மாடிகளுக்கும் சென்று பணிகளை விரைவாக முடித்து, திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக மருத்துவமனையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வரின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மருத்துவமனை திறப்பு விழா நடக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.