Published : 24 Feb 2014 06:15 PM
Last Updated : 24 Feb 2014 06:15 PM

தமிழக மீனவர்கள் 29 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேருக்கு, இலங்கை நீதிமன்றம் மார்ச் 10 வரை காவலை நீட்டித்து இன்று உத்திரவிட்டது.

கடந்த பிப்ரவரி 13 அன்று ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டிணம், கோட்டைப் பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து தமிழக மீனவர்கள் 5000க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் ஒரு விசைப்படகையும் , நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 17 பேரையும் 4 விசைப்படகையும், கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப் பட்டிணம் மற்றும் கோட்டைப் பட்டிணம் சார்ந்த 8 மீனவர்களையும் இரண்டு விசைப் படகையும் சிறைப்பிடித்து மொத்தம் 29 தமிழக மீனவர்களையும் சிறைப்பிடித்தனர்.

பின்னர் சிறைப் பிடிக்கப்பட்ட 29 மீனவர்களையும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி 29 காங்கேசன் துறைக்கு கொண்டு சென்று யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் 29 பேரின் காவல் திங்கட்கிழமையோடு முடிவடைந்ததை தொடர்ந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தினர்.

மீனவர்களை விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி மகேந்திர ராஜா இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து மார்ச் 10 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 29 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x