Published : 25 Feb 2014 04:21 PM
Last Updated : 25 Feb 2014 04:21 PM

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்காதது சரித்திர சோகம்: கருணாநிதி

ஈழத் தமிழர்களுக்கான நீதி கிடைக்காமல் இருப்பது உலகச் சரித்திரத்தின் சோகமாகவே கருதப்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், " 'பிப்ரவரி 26 - ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள்' என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு, பிரிட்டானியப் பாராளுமன்றத்தில் கூடிய, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய பல தமிழ் அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளினாலும் தொண்டு நிறுவனங்களாலும் 'இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி ஒரு முழுமையான சர்வதேச சுதந்திரமான விசாரணையை ஐ.நா. வில் அங்கம் வகிக்கும் நாடுகள் மேற்கொள்ள வேண்டுமென்றும்,

குறிப்பாக இன அழிப்பு போர் குற்றங்கள், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டுமென்றும்' தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

'டெசோ' அமைப்பின் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் சர்வதேச விசாரணை வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. 'டெசோ' அமைப்பில் இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் கொடுத்து, அதன் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறார்கள். அண்மையில் திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பத்தாவது மாநில மாநாட்டில் சர்வதேச விசாரணை குறித்து தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் கேட்டு சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பயணம் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கு நீதியும் நியாயமும் கிடைத்திருக்கும் வேளையில், ஈழத் தமிழர்களுக்கான நீதி கிடைக்காமல் இருப்பது உலகச் சரித்திரத்தின் சோகமாகவே கருதப்படுகிறது.

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் விரைவில் கிடைத்திட சுதந்திரமான, நம்பகத் தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்திட அவர்கள் வாழும் நாடுகளின் அரசை வற்புறுத்திட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x