Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM

வங்கக் கடலில் ‘மாதி’ புயல் தீவிரம்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. இதற்கு ‘மாதி’என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிரமடைந்து இலங்கை க்கும் தமிழகத்துக்கும் இடையே இருந்து வந்தது. வளி மண்டலத்தில் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக இது தாழ்வு மண்டலமாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்த இது, சனிக்கிழமை காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘மாதி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, மாலத்தீவு பரிந்துரைத்த பெயராகும். சனிக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 500 கி.மீ. தூரத்தில் ‘மாதி’ புயல் நிலை கொண்டிருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு, வட கிழக்கு திசையில் நகரும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் மழை குறைவாகவே இருக்கும். கடல் காற்று 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில். அவ்வப்போது மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

வங்கக் கடலில் கடந்த இரண்டு மாதங்களில் ‘பைலின்’, ‘ஹெலன்’, ‘லெஹர்’ ஆகிய மூன்று புயல்கள் உருவானது. எனினும் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கவில்லை.

தற்போது உருவாகியிருக்கும் ‘மாதி’ புயலும் தமிழகத்தை நோக்கி நகராது என்பது ஏமாற்றம் தரும் செய்தியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x