வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு
Updated on
1 min read

கன்னியாகுமரி அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ''தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலவி வருகின்றன. இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் கன்னியாகுமரி அருகே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, அதிகபட்ச வெப்பநிலையாக சேலத்தில் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும் மதுரை, பாளையங்கோட்டை, தருமபுரியில் 35 டிகிரி செல்சியஸ், கோவை, திருப்பத்தூரில் 34 டிகிரி செல்சியஸ், சென்னையில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது'' என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in