

சென்னையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் தலைவனை மேற்கு வங்கத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை வியாசர்பாடியில் கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த ரபீக், சாகுல்ஹமீது ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் கள்ளநோட்டுகள், ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் சென்னையின் பல இடங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
பிடிபட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் பிரிக்கால் என்பவர்தான் கள்ளநோட்டு கும்பல் தலைவனாக செயல்படுவது தெரிந்தது. அவரைப் பிடிக்க சிபிசிஐடி போலீஸார் பலமுறை கொல்கத்தா சென்று தேடுதல் வேட்டை நடத்தியும் பலனில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் மீண்டும் கொல்கத்தா சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீஸாருக்கு அப்துல் பிரிக்கால் இருக்கும் இடம் தெரிந்தது. அந்த இடத்தை சுற்றிவளைத்த போலீஸார் மீது பிரிக்கால் தாக்குதல் நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்து துப்பாக்கி முனையில் அவரை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்ற அனுமதியுடன் அவரை நேற்றிரவு ரயிலில் சென்னை அழைத்துவந்தனர்.
கைது செய்யப்பட்ட அப்துல் பிரிக்கால், பாகிஸ்தானில் இருந்து கள்ளநோட்டுகளை வாங்கி வந்து இந்தியாவின் பல நகரங்களில் புழக்கத்தில் விட்டுள்ளார். ரூ.40 ஆயிரம் நல்ல நோட்டு கொடுத்தால் ரூ.1 லட்சம் கள்ள நோட்டு கொடுப்பாராம். சென்னை அழைத்து வரப்பட்ட அப்துலிடம் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.