Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

2-வது மனைவிக்கு ஓய்வூதிய உரிமை உண்டா?

முதல் திருமணத்தை மறைத்த கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு ஓய்வூதியம் பெறும் உரிமை உண்டா என்பது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக லீலா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு 61 வயதான பத்மநாபன் என்பவர் பத்திரிகையில் ஒரு விளம்பரம் செய்திருந்தார். தனக்கு மனைவியோ, குழந்தைகளோ இல்லையென்றும், மாதம் ரூ.8 ஆயிரம் வருவாய் உள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் விளம்பரத்தில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அவரை திருமணம் செய்து கொள்ள நான் சம்மதித்தேன். தாம்பரம் ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் கடந்த 2003-ம் ஆண்டில் எனது கணவர் இறந்தார். அதன் பின் குடும்ப ஓய்வூதியம் கேட்டு நான் விண்ணப்பித்தேன். ஆனால் ஏற்கெனவே பத்மநாபன் முதல் திருமணம் செய்து, அந்த திருமண உறவு இன்னும் நீடிப்பதால், இரண்டாவது திருமணம் செய்த எனக்கு ஓய்வூதியம் பெறும் உரிமை இல்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். உயர் நீதிமன்ற தனி நீதிபதியும் எனது மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

முதல் திருமணம் செய்த உண்மையை எனது கணவர்தான் மறைத்துள்ளார். நான் எவ்வித தவறும் செய்யாததால் எனக்கு ஓய்வூதியம்

வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தனது மேல் முறையீட்டு மனுவில் லீலா கூறியிருந்தார்.

இந்த மனு மீது நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

முதல் திருமணம் செய்த தகவலை தனது கணவர் மறைத்து, தன்னை ஏமாற்றிவிட்டதாக மனுதாரர் லீலா கூறுகிறார். ஆகவே, அவரது இந்த நிலையைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியம் கோரும் அவரது விண்ணப்பம் குறித்து ஓய்வூதியத் துறை அதிகாரிகள் மீண்டும் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x