

முதல்வர் ஜெயலலிதாவை அவ தூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பிடிவாரன்ட் உத்தரவை பெரம்பலூர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
பெரம்பலூரில் கடந்த 14.8.2012 அன்று தேமுதிக சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலை வர் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது அரசு வழக்கறிஞர் குலோத்துங்கன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜ ராகவில்லை. இதனால், விசார ணைக்காக தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த விஜயகாந்துக்கு நீதிபதி நஷிமா பானு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான தேமுதிக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பாலாஜி, அவதூறு வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராகத் தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில் பெற்றுள்ள உத்தரவைக் காண்பித்து, பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரினார். இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பு வகித்த மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் எம்.சஞ்சீவி பாஸ்கர், விஜயகாந்த் மீதான பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்து, இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.