மாம்பழம் சீசன் தொடங்கியது: சந்தைக்கு முக்கிய ரகங்கள் வராததால் மக்கள் ஏமாற்றம்

மாம்பழம் சீசன் தொடங்கியது: சந்தைக்கு முக்கிய ரகங்கள் வராததால் மக்கள் ஏமாற்றம்
Updated on
1 min read

தமிழகத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியது. ஆனால், மதுரை சந்தைகளில் முக்கிய ரக பழங்கள் இதுவரை வராததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மதுரை, தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 2 லட்சம் ஹெக்டேருக்கு மேல் மா விவசாயம் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 ஆயிரம் ஹெக்டேரிலும், மதுரை மாவட்டத்தில் 6, 256 ஹெக்டேரிலும் மா சாகுபடி நடக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக வறட்சியால் மா மரங்களில் போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு மா மரங்களில் ஓரளவு பூக்கள் பிடித்திருந்தாலும் வறட்சியால் விளைச்சல் கிடைக்குமா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொதுவாக மா மரங்களில் டிசம்பர், ஜனவரியில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பிப்ரவரியில் காய்கள் பிடிக்க ஆரம்பித்து மார்ச் கடைசி வாரம் முதல் மாம்பழங்கள் சந்தைகளுக்கு விற்பனைக்கு வர ஆரம்பிக்கும். ஏப்ரல், மே மாம்பழ சீசன் சந்தைகளில் களைகட்டும். ஜூன் மாதத்துடன் மா சீசன் நிறைவடையும்.

இந் நிலையில், இந்த ஆண்டிற்கான மா சீசன், தற்போது தொடங்கியுள்ளது. ஆனால், சந்தைகளுக்கு இன்னும் முக்கிய ரக பழங்களும், சுவையான தரமான பழங்களும் வர ஆரம்பிக்கவில்லை. பிஞ்சுகளும், கருப்பு புள்ளி விழுந்த சுவையில்லாத பழங்கள் மட்டுமே வந்துள்ளன. அதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதியிடம் கூறியதாவது:

தற்போது தான் மா சீசன் தொடங்கியுள்ளது. முக்கிய ரக பழங்களில் செந்தூரம் மட்டும் வர ஆரம்பித்துள்ளது. பங்கனப்பள்ளி, அல்போன்சா, பெங்களூருரா, காசா லட்டு போன்ற மற்ற ரக பழங்கள் இன்னும் 15 நாட்களில் வர ஆரம்பித்துவிடும். விவசாயிகள் மரங்களில் மா பழங்களை முதிர்ந்த பின்பே அறுவடை செய்ய வேண்டும். வியாபாரிகள், மரங்களில் அவசரப்பட்டு காய்களை பறித்து ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைத்து சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வந்துவிடுகின்றனர். பல இடங்களில் ரசாயனக் கற்களை வைத்து பழுக்க வைக்கும் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கற்களை வைத்து பழுக்க வைப்பதால் அந்த பழங்களை சாப்பிடுவோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். பக்க விளைவுகளை உண்டாக்கும். அதனால், வியாபாரிகள் கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது.

இந்த ஆண்டு நிலவும் வறட்சி மா மரங்களில் பூக்கள் பூப்பதற்கும், கடைசியாக பெய்த கோடை மழை காய்கள் பெரிதாவதற்கும் உகந்ததாக இருக்கிறது. அதனால், இந்த ஆண்டு மா சீசன் சிறப்பாகவே அமைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in