Published : 18 Feb 2014 12:00 AM
Last Updated : 18 Feb 2014 12:00 AM

ஒரே நாளில் 53,129 பேர் ரத்த தானம்: முதல்வரிடம் சாதனை சான்றிதழ் வழங்கினார் கின்னஸ் பிரதிநிதி

தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் நடத்தப்பட்ட மெகா ரத்ததான முகாமில் ஒரே நாளில் 53,129 பேர் ரத்த தானம் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இதற்கான அத்தாட்சி சான்றிதழை முதல்வர் ஜெயலலிதாவிடம் கின் னஸ் அமைப்பின் பிரதிநிதி லுசியா திங்கள்கிழமை வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் 66-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், கரூர், திருச்சி, கும்பகோணம், மதுரை மற்றும் நெல்லை ஆகிய 10 இடங்களில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

இதில் 53,129 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இதற்கு முன்பு 2010-ல் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 43,732 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியதே கின்னஸ் உலக சாதனையாக இருந்தது.

தற்போது, அந்த சாதனையை முறியடித்து 53,129 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி கின்னஸ் உலக சாதனை படைத் துள்ளனர். இதை அங்கீகரிக் கும் வகையில், கின்னஸ் அமைப் பின் பிரதிநிதி லுசியா, முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். பின்னர் முதல்வரிடம் பேசிய லுசியா, ‘‘தமிழ்நாட்டில் 10 இடங்களில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் மொத்தம் 53,129 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். இது புதிய கின்னஸ் சாதனையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சாதனை முயற்சியின் விளைவாக மொத்தம் 18,439.28 லிட்டர் ரத்தம் சேகரிக்கப் பட்டுள் ளது. இது பலரின் வாழ்வை காப்பாற்றும். தமிழக அரசின் ஒத்துழைப்பின்றி இவ்வளவு பெரிய சாதனையைப் புரிந்திருக்க முடியாது.

மேலும், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நிகழ்வு உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய அளவில் (ஒரே நாளில் பல இடங்களில்) ரத்ததானம் செய்து கின்னஸ் சாதனை புரிந்ததற்கான விருதுச் சான்றிதழினை தங்களிடம் (முதல்வரிடம்) அளிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்றார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x