Published : 12 Nov 2013 11:55 AM
Last Updated : 12 Nov 2013 11:55 AM

டெல்லிக்குப் புறப்பட்டனர் தமிழக மீனவர்கள் - பிரதமரைச் சந்திக்கத் திட்டம்

மீன்பிடித் தொழிலில் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளைக் களையும் வகையில், பிரதமரை நேரில் சந்தித்து முறையிடுவதற்காக தமிழக மீனவப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டிலும் தாக்கு தலிலும் தமிழக மீனவர்கள் பலர் உயிரிழந்தனர். இதனால், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக கூலிக்கு மற்றவர்களிடம் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தற்போது நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பலர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களது 42 மீன்பிடி படகுகளையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துவைத்துள்ளது. பல லட்ச ரூபாய் கடனில் வாங்கிய விசைப் படகுகளை இழந்துள்ளதால், பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியும், தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும் இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் புதுச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் 9 பேர் தேசிய மீனவர் பேரவையின் செயலர் இளங்கோவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். வருகிற 12-ம் தேதி பிரதமர் மன்மோகன்

சிங்கை நேரில் சந்தித்து மீன்பிடிப்பதில் தங்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை எடுத்துரைக்கவுள்ளனர். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

“இலங்கை அரசு கைது செய்துள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்துள்ள படகுகளையும் மீட்டுத் தர வேண்டும். இருநாட்டு மீனவர்களையும் ஒருங்கிணைத்துப் பேசி ஒப்பந்தம் ஏற்படுத்தித் தர வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x