Published : 15 Jan 2014 02:16 PM
Last Updated : 15 Jan 2014 02:16 PM

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.30 கோடி நிதி: முதல்வர் உத்தரவு

தமிழகம் முழுவதும் 35 சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் மற்றும் 4 பதிவுத்துறை வளாகங்களுக்கு ரூ.30 கோடியில் சொந்தக் கட்டிடங்கள் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொதுமக்களுடன் அதிக அளவு தொடர்பு கொண்டுள்ள பதிவுத் துறை அலுவலகங்கள் பல, தனியார் கட்டிடங்கள், பழுதடைந்த மற்றும் 100 ஆண்டுகள் பழமையான அரசுக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இவை போதிய அடிப்படை வசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி உள்ளதால், இங்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பணியாளர்கள் பணிபுரிவதற்கு போதுமான இடவசதி, பாதுகாப்பான வைப்பறைகள் ஆகியவையும் இல்லாத நிலை உள்ளது.

சொந்த கட்டிடங்கள்

இதைக் கருத்தில்கொண்டு, வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்துக்கும் 5 ஆண்டுகளுக்குள் சொந்தக் கட்டிடங்கள் கட்ட அரசு முடிவு எடுத்துள்ளது. புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் அலுவலர்களுக்கான அறைகளுடன், கணினி அறை, பதிவுருக்கள் பாதுகாப்பு அறை, பொதுமக்கள் காத்திருப்பதற்கான அறை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள மேடை, அகலமான நடைபாதை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்படும்.

2011-12ம் ஆண்டில் ரூ.26 கோடியில் 52 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடம் கட்டவும், 2012–13ல் ரூ.48.90 கோடி மதிப்பீட்டில் 17 இடங்களில் 29 சார் பதிவாளர் அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகங்கள் கட்டுவதற்கும் மற்றும் தனித்தனி இடங்களில் உள்ள 48 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டவும் முதல்வர் ஜெயலலிதா அளித்த உத்தரவின்பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல், உதகை, கோயம்பேடு

இதன் தொடர்ச்சியாக, நடப்பு நிதியாண்டில் திண்டுக்கல், உதகமண்டலம், கோயம்பேடு மற்றும் செய்யாறு ஆகிய 4 இடங்களில் 11 சார் பதிவாளர் அலுவலகங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாக கட்டிடங்கள் சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தும் அமைப்புடன் கட்டுவதற்கும் 35 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தனித்தனியே கட்டிடங்கள் கட்டுவதற்கும் நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகக் கட்டிடங்களுக்கென ரூ.10.75 கோடியும் ஒரு சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடம் கட்ட ரூ.55 லட்சம் வீதம் 35 அலுவலகங்களுக்கு ரூ.19.25 கோடியும் என மொத்தம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x