Published : 26 Mar 2014 10:45 AM
Last Updated : 26 Mar 2014 10:45 AM

என்.ஆர்.காங்.கை ஆதரிக்க கோரிக்கை: பாமக வேட்பாளருடன் பாஜக சந்திப்பு

புதுச்சேரி பாமக வேட்பாளரை பாஜக நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்குமாறு கடிதம் தந்தனர்.

புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமக கட்சிகளிடையே சர்ச்சை தொடர்கிறது. புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குதான் ஒதுக்கப்பட்டது என மாநில பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன் கூறியிருந்தார். எனினும் இதை ஏற்க பாமக மறுத்துவருகிறது.

இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகிகள் எம்.விஸ்வேஸ் வரன், ஆர்.வி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை பாமக வேட்பாளர் அனந்தராமனை நேரில் சந்தித்தனர். தனியாக அவர்கள் 15 நிமிடங்கள் பேச்சு நடத்தினர்.

இதுகுறித்து பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை அனைவரும் ஆதரிக்க வலியுறுத்தி கூட்டணி கட்சிகளிடம் கடிதம் தந்து வருகிறோம். அதன்படி பா.ம.க. மாநில செயலர் அனந்தராமனிடம் கடிதம் அளித்தோம்.

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர். இது இறுதியானது. இப்பிரச்சினை குறித்து இரண்டு நாளில் நல்ல தீர்வு ஏற்படும் எனத் தெரிவித்தார்.

’பாமக பின்வாங்காது’

முன்னதாக பாமக அலுவலகத் தில் அக் கட்சி வேட்பாளர் அனந்தராமன் கூறியதாவது:

புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தான் ஒதுக்கப்பட்டது என்பதை வாய்மொழியாகக் கூறினால் ஏற்க முடியாது. தமிழகத்தின் நிலை வேறு, புதுவையின் நிலை வேறு.

தேமுதிக தலைவர் விஜய காந்த், மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஆகியோரின் ஆதரவைக் கேட்டுள்ளோம். எக்காரணம் கொண்டும் போட்டியில் இருந்து பாமக பின்வாங்காது. சென்னையில் பேட்டி அளித்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் புதுச்சேரி வேட்பாளர் பிரச்சினையில் 2 நாட்களில் முடிவு தெரியும் எனக் கூறியுள்ளார்.

மாற்றுக் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் யார், யாரை சந்திக்கின்றனர், கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வந்துள்ளனர், யார் ஆதரவு தருகின்றனர் என காவல்துறை அதிகாரிகள் மூலம் என்.ஆர் காங்கிரஸ் அரசு உளவு பார்க்கிறது. இதுகுறித்து தேர்தல் துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பணிபுரிய விடாமல் பாமக-வின ருக்கு காவல்துறையினர் நெருக் கடி தருகின்றனர். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அனுப்புவோம் என்றார்.

விஜயகாந்த், வைகோ, ஆகியோரின் ஆதரவைக் கேட்டுள்ளோம். எக்காரணம் கொண்டும் போட்டியில் இருந்து பாமக பின்வாங்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x