

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு அல்லது அதிகாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
மேற்கு மத்திய வங்கக் கடலில், ஆந்திரக் கடலோரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், இரவு அல்லது அதிகாலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.