Published : 10 Mar 2017 08:48 AM
Last Updated : 10 Mar 2017 08:48 AM

கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.937 கோடியில் பணிகள்: நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி தகவல்

மாநிலம் முழுவதும் கோடை கால குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.937 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதி களில் வாழும் மக்களுக்கு வழங்கப் படும் குடிநீர் விநியோகம் தொடர் பாக, உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று, குடிநீர் விநியோக பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பல்வேறு பணிகள்

மாநிலம் முழுவதும் கோடை கால நீர் தேவையை சமாளிக்க ரூ.937 கோடியே 76 லட்சம் செலவில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், பழைய கிணறுகளைப் புதுப்பித்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், பழுதடைந்த மோட்டார்களை மாற்றுதல், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்தல், புதிதாக வாங்குதல், குடிநீர் குழாய்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி ஆணையர்கள், பொறி யாளர்கள், நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள், ஊரகப் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வழங்கல் பணிகளை காலை 6 மணி முதலே நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.60 கோடியில் நடவடிக்கை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 1629 மில்லி யன் கனஅடி (13 சதவீதம்) குடிநீர் மட்டுமே உள்ளது. இருந்தபோதி லும் தற்போதுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட குடி நீர் ஆதாரங்கள் மூலம் நாளொன் றுக்கு 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கோடை நீர் தேவையை சமாளிக்க ரூ.60 கோடி மதிப்பீட்டில், 13 நீர் நிரப்பும் அமைப்புகளை ஏற்படுத்துதல், கூடுதலாக 100 குடிநீர் லாரிகளை வாடகைக்கு அமர்த்துதல், கூடுதலாக 660 புதிய பிளாஸ்டிக் தொட்டிகள் அமைத்தல், புதிதாக 75 கை பம்புகள் அமைத்தல், குவாரிகளில் இருந்து நீரை செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பருவமழை பொய்த்ததால் கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்கள் அனைவரும் குடிநீரை வீணடிக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் க.பணீந்திரரெட்டி, ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய மேலாண் இயக்குநர் தீரஜ்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் அருண்ராய், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கா.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x