Published : 07 Jan 2017 06:21 PM
Last Updated : 07 Jan 2017 06:21 PM
கன்னியாகுமரியில் உள்ள 5 கோயில்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எச்டிஎப்சி வங்கி இந்த பரிவர்த்தனை முறையை சாத்தியமாக்கியுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, மின்னணு முறையிலான ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ரொக்கமாகப் பணத்தை கையாளுவதற்குப் பதிலாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தனுமலையான் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகர்கோயில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், வெள்ளிமலை குமாரசாமி கோயில் என மொத்தம் 5 கோயில்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறியுள்ளன.
காணிக்கை, அன்னதான நன்கொடை, வழிபாட்டு கட்டணங்கள் ஆகியவற்றை பக்தர்கள் டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் என்று கோயில்களில் அறிவிப்புப் பலகையும் இடம் பெற்றுள்ளது.
ரொக்கமில்லா பரிவர்த்தனை வசதியை கோயில்களில் சாத்தியமானது குறித்து, எச்டிஎப்சி வங்கியின் (ரீடெய்ல் பேங்கிங்) தமிழக மண்டல தலைமை அதிகாரி சுரேஷ் கூறுகையில், ''பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தென்பகுதியின் முக்கிய அடையாளமாக கன்னியாகுமரி இருப்பதால் இங்குள்ள கோயில்களில் டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோல சுமார் 50 கோயில்கள் வரை இந்த ரொக்கமில்லா பரிவர்த்தனை வசதியை பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT