Published : 24 Sep 2016 11:13 AM
Last Updated : 24 Sep 2016 11:13 AM

மருத்துவப் படிப்பு இடத்துக்காகவே சரவணனின் கொலை நிகழ்ந்துள்ளது: தந்தை குற்றச்சாட்டு

திருப்பூரைச் சேர்ந்தவர் மருத்துவர் சரவணன் (24). டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பொது மருத்துவப் பிரிவில் சேர்ந்த இவர், கல்லூரியில் சேர்ந்த 10 நாட்களில், கடந்த ஜூலை 10-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். டெல்லி போலீஸார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இந்நிலையில், சரவணனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. அவரது உடலில், யாரோ விஷ ஊசி செலுத்தி இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சரவணனின் தந்தை கணேசன், திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என் மகன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என, டெல்லியில் வைத்து பார்த்ததும் கூறிவிட்டேன். அந்த மனநிலையில், அவர் எப்போதும் இருந்ததில்லை. படிப்பில் மிகவும் திறமைசாலி. டெல்லி எய்ம்ஸில் பொது மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அவனது லட்சியமாக இருந்தது. அது நிறைவேறிய சில நாட்களில் எப்படி ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முடியும்?

சரவணனின் உயிரிழப்பு, அவனது மருத்துவப் படிப்பு இடத்துக்காகவே நிகழ்ந்துள்ளது. இதில் எய்ம்ஸ் மருத்துவர்கள், போலீஸார் சிலருக்குத் தொடர்புள்ளது. உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x