Published : 05 Apr 2014 11:51 AM
Last Updated : 05 Apr 2014 11:51 AM

ஊராட்சி துணைத் தலைவர் தாக்குதல்: இருவர் கைது, மேலும் இருவருக்கு வலை

மணல் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், விடையூர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் உள்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது விடையூர் கிராமம். இங்கு ஊராட்சிமன்ற துணைத் தலைவராக ஏழுமலை என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்தக் கிராமத்தில் உள்ள கலியனூர் ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

வியாழக்கிழமை மாலை ஏழுமலை தனது நண்பர் கணேசன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அக்கிராமத்தைச் சேர்ந்த சரவணன், சத்யா, நித்யானந்தம், பாபு ஆகிய நால்வரும் ஏழுமலையிடம் சென்று, கலியனூர் ஏரியில் இருந்து அதிகளவு மணல் அள்ளப்படுகிறது. இதை நீங்கள் தடுத்து நிறுத்த மாட்டீர்களா எனக் கேட்டு, அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஏழுமலை, கணேசன் ஆகிய இருவரையும் நான்கு பேர் சேர்ந்து பலமாக தாக்கினர். இதில், அவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, திருவள்ளூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட சரவணன், சத்யா ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நித்யானந்தம், பாபு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x