Published : 13 Jan 2017 12:37 PM
Last Updated : 13 Jan 2017 12:37 PM

வறுமையில் வாடும் நகர்ப்புற எச்ஐவி நோயாளிகள்: உழவர் அட்டை இல்லாததால் உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு

நகர்ப்புறங்களில் வசிக்கும் எச்ஐவி பாதிக்கப்பட்ட நோயாளிகள், உழவர் பாதுகாப்பு அட்டை உதவித்தொகை கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர்.

தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எச்ஐவி/எய்ட்ஸ் பாதித்த நோயாளிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள உழவர் அட்டை வைத்துள்ள எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு மட்டுமே உழவர் அட்டை வழங்க ப்படுகிறது. நகர்ப்புறங்களில் உள்ளவர்களிடம் உழவர் அட்டை இல்லை. அதனால், நகர்ப்பு றங்களில் வசிக்கும் எச்ஐவி/எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை.

எச்ஐவி/எய்ட்ஸ் பாதித்த வர்கள், சத்தான உணவுகள் சாப்பிடுவதற்காகவே இந்த உதவித்தொகை வழங்கப் படுகிறது. எனவே, கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள எச். ஐ.வி. பாதித்த அனைவருக்கும் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் கருணாநிதி கூறியதாவது:

தமிழகத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் கிராமப்பு றங்களில் வாழ்பவர்கள் 50 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் 50 சதவீதம் பேரும் உள்ளனர். இதில் கிராமப் புறங்களில் வசிப்பவர்களில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசின் உதவித்தொகை கிடைத்து வருகிறது. மீதமுள்ள 30 சதவீதம் பேருக்கு உழவர் பாதுகாப்பு அட்டை கிடைக்காததால் அரசின் உதவித்தொகை பெற முடிய வில்லை. நகர்ப்புறங்களில் உழவர் அட்டை வழங்கப்படவில்லை என்பதால், அங்கு வசிக்கும் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை எதுவும் கிடைப்பதில்லை. இதனால், இவர்களில் பலர் வறுமையில் வாடுகின்றனர். குறிப்பாக எச்ஐவி பாதித்த விதவைகள், அன்றாட குடும்பச் செலவுகளை மேற்கொள்ள முடியாமலும், குழந்தைகளின் படிப்புச் செலவு களை செய்ய முடியாமலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதனால், நகர்ப்புறங்களில் வசிப்போருக்கும் உதவித்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் விடுபட்ட நபர்களுக்கும் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கணக்கெடுப்பில் விடுபட்டதால் நேரிட்ட தவறு

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “அரசு ஆணைப்படி, நகர்ப்புறம், கிராமப்புறம் வித்தியாசமில்லாமல் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களில் பணியாற்றுவோருக்கு உழவர் பாதுகாப்பு அட்டை கொடுக்க வேண்டும். ஆனால், ஆரம்ப காலத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த கணக்கெடுப்பில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விடுபட்டுள்ளனர்.

எனவே, நகர்ப்புறங்களில் வசிக்கும் எச்ஐவி பாதித்தவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கி உதவித்தொகையை வழங்கலாம். இது அந்தந்த பகுதியின் வருவாய்த்துறை அதிகாரிகளை பொறுத்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x